செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

கும்பகோணம் அகோர வீரபத்திர சுவாமி திருக்கோயில் - கும்பாபிஷேக அழைப்பிதழ், நிகழ்ச்சி நிரல்

கும்பகோணம் தேசிகேந்திர சுவாமிகள் மடம் வீர சைவ பெரிய மடத்துக்குச் சொந்தமான அருள்மிகு அகோர வீரபத்திர சுவாமி திருக்கோயிலில் பிப்ரவரி 12 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.

அதற்கான அழைப்பிதழும், நிகழ்ச்சி நிரலும் இணைக்கப்பட்டுள்ளது.





கும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் இந்த முறை 10 நாட்கள் உற்சவம்.

மகாமகத் திருவிழா காணும் திருக்கோயில்களில் ஒன்றான கும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டு 10 நாட்கள் உற்சவம் நடைபெற இருக்கிறது.


இத்திருக்கோயிலில் இதற்குமுன், 1933 மகாமகத்தின் போது பத்து நாட்கள் உற்சவம் நடைபெற்று, மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

போதிய நிதி மற்றும் மண்டகபடிதாரர்கள் கிடைக்கப் பெறாததால் அதன்பின் வந்த மகாமகங்களிலும், மாசி மகங்களிலும் ஏக தின உற்சவம் மட்டுமே நடைபெற்றது.

இந்த மகாமகத்திற்கு கோயில் நிர்வாகமும், உபயதாரர்களும் இணைந்து 10 நாட்கள் உற்சவம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் 83 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு மகாமகத்திற்கு 10 நாட்கள் உற்சவம் நடைபெற இருக்கிறது. பிப்ரவரி 13ந் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது.


விரிவான செய்திக்குறிப்பு - தி இந்து தமிழ் நாளிதழ்

கும்பகோணம் மண்டலத்திற்கு 32 புதிய அரசு பேருந்துகள்

அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மண்டலத்திற்கு 32 புதிய பேருந்துகள் இயக்கும் துவக்க விழா நேற்று நடந்தது.

சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 701 புதிய பேருந்துகளையும், 65 புதிய மினி பேருந்துகளையும் தொடங்கி வைத்தார். இதில் கும்பகோணம் மண்டலத்திற்கு 32 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார்.

விரிவான செய்திக்குறிப்புக்கு - தினமணி, தினமலர் (09.02.2016)

நாதன்கோயிலில் ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உதய கருட சேவை

கும்பகோணம் அருகே உள்ள நாதன் கோவில் ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் தை மாத அமாவாசையையொட்டி திங்கள் கிழமை உதய கருட சேவை நடைபெற்றது.

உதய கருட சேவையைத் தொடர்ந்து கோயில் எதிரே உள்ள நந்தி புஷ்கரணி குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெற்றது. பின்னர் தீர்த்தவாரியில் சக்கரத்தாழ்வார் புனித நீராடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விரிவான செய்திக்குறிப்பு - தினமணி, தினகரன் (09-02-2016)

தை அமாவாசையை முன்னிட்டு காவிரியாற்றில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு




மகாமகம் - காவல்துறை சிறப்பு ஏற்பாடு - குடியிருப்போருக்கு அனுமதிச் சீட்டு

மகாமகப் பெருவிழாவையொட்டி காவல்துறையால் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரு சக்கர வாகனங்களுக்கு தடையில்லை 

கும்பகோணம் நகருக்குள் சென்று வர இரு சக்கர வாகனங்களுக்கு தடையில்லை என போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்தும் டி.எஸ்.பி. மகேசன் தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது என அவர் தெரிவித்துள்ளார்.

குடியிருப்போருக்கு அனுமதிச் சீட்டு

கும்பகோணத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவல் நிலையங்கள் மூலம் எந்தெந்த தெருவில் எத்தனை வீடுகள் உள்ளன. வீடுகளில் உள்ளோரின் எண்ணிக்கை உள்ளிட்டவை கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு காவல் துறை சார்பில் குடியிருப்போருக்கான அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என நகர்மன்றத் தலைவர் ரத்னாசேகர் தெரிவித்துள்ளார்.

120 இடங்களில் கண்காணிப்பு

மகாமகத்தினை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த காவல்துறை சார்பில் இரும்பினால் ஆன தடுப்புகள் 2000 தயாரிக்கப்பட்டுள்ளன.

இவை மகாமகக் குளம், பொற்றாமரைக்குளம், தற்காலிகப் பேருந்து நிலையங்கள், சாலைகள், மற்றும் காவிரி ஆறு சாலைகள் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டு போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படும். மேலும் 120 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

விரிவான செய்திக்குறிப்பு - தினமணி, தினகரன் (09-02-2016)

திங்கள், 8 பிப்ரவரி, 2016

மகாமகப் பணிகள் -07-02-2016







மகாமகத் திருவிழாவில் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம். பிப் -20 ல் நடக்கிறது.

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம்  வரும் பிப்ரவரி 20ந் தேதி நடைபெற இருக்கிறது.

பொதுவாக மாசிமகத்திருவிழா கொடியேற்றத்திலிருந்து 8-ம் நாள் தேரோட்டம் நடைபெறும். கடந்த 1968-ல் நடைபெற்ற மகாமகத் திருவிழாவின் போது ஆதிகும்பேஸ்வரர் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்களின் கூட்டம் காரணமாக அதன்பிறகு, ஆண்டு தோறும் மாசிமகத் திருவிழாவின் போது மட்டுமே தேரோட்டம் நடைபெற்றது.

தற்போது நடைபெற உள்ள மகாமகப் பெருவிழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், இவ்வாண்டு தேரோட்டம் நடத்த வேண்டுமென பெரும்பாலான பக்தர்கள் விரும்பியதால், வரும் 20ந் தேதி ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம் நடைபெற இருக்கிறது. இதற்காக கும்பேஸ்வரர் கோயில் தேருக்கு சாரம் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

விரிவான செய்திக்குறிப்பு - தி இந்து தமிழ் நாளிதழ். தினகரன்

ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோவிலில் புதிய சப்தஸ்தான பல்லக்கு வெள்ளோட்டம்

பிப்-7, கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் சப்தஸ்தான பல்லக்கு வெள்ளோட்டம் நடைபெற்றது.

சப்தஸ்தானப் பல்லக்கு உற்சவம் எனும் ஏழூர் பல்லக்கு விழா, ஒரு தலத்தைச் சுற்றியுள்ள ஊர் மக்களுடைய ஒற்றுமை வளர்ச்சிக்கான விழாவாகும். ஏழூர் பல்லக்கை தரிசித்தால் ஏழு பிறப்புக்கும் வேண்டிய எண்ணற்ற புண்ணியங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்,
சாக்கோட்டை அமிர்தகலச நாதர் திருக்கோயில்,
தாராசுரம் ஆத்மநாதசுவாமி திருக்கோயில்,
திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் திருக்கோயில்,
கொட்டையூர் கோடீஸ்வரர் திருக்கோயில்,
மேலக்காவேரி கைலாசநாதசுவாமி திருக்கோயில்,
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில்.

ஆகியவை இத்தலத்திற்குரிய சப்தஸ்தானத் தலங்களாகும். பழுதடைந்திருந்த இப்பல்லக்கு பக்தர்களின் உதவியால் புனரமைக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. வெள்ளோட்டத்திற்கு முன்னால் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

மகாமத்தினையொட்டி பிப் 12 அமிர்த தீர்த்தம் கொண்டு செல்வது, 17ந் தேதி இரட்டைவீதி புறப்பாடு ஆகியவை இப்பல்லக்கில் நடைபெறுகின்றன.

விரிவான செய்திக்குறிப்பு - தினமணி, தினகரன், தினத்தந்தி, தி இந்து தமிழ் நாளிதழ்.

நகருக்குள் நெருக்கடியைத் தவிர்க்க பகல் நேரங்களில் லாரிகளை நகருக்குள் இயக்க கட்டுப்பாடு

மகாமகத்தையொட்டி கும்பகோணத்தில் பகல் நேரங்களில் லாரிகளை இயக்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  பக்தர்களின் எண்ணிக்கையையும், மகாமகப் பணிகளையும் கருத்தில் கொண்டு லாரிகள் மற்றும் வணிகம் தொடர்பாக பயன்படுத்தும் சரக்கு வாகனங்கள் பிப் 07 முதல் பிப் 23 வரை நாள் தோறும் இரவு 10 மணி முதல் காலை 6 மணிக்குள் பொருள்களை இறக்கிக் கொள்ளவும், ஏற்றிக் கொள்ளவும் வேண்டும்.

தொடர்புடைய வாகன உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்களது வாகனங்களை உரிய நேரத்தில் பயன்படுத்திக் கொண்டு மாவட்ட காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.