திங்கள், 15 பிப்ரவரி, 2016

மகாமகம் - லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்தாலும் சமாளிக்க முழு ஏற்பாடுகள் - மாவட்ட ஆட்சியர் தகவல்

பிப் 14 - மகாமகப் பெருவிழாவையொட்டி, தீர்த்தவாரி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தாலும், சமாளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார்.

கும்பகோணம் மகாமகப் பெருவிழா சனிக்கிழமை தொடங்கிய நிலையில், மகாமகக் குளத்தை ஒட்டி அமைந்துள்ள காசி விசுவநாதர் சுவாமி கோயில், அபிமுகேசுவரர் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட பிறகு ஆட்சியர் தெரிவித்ததாவது

விழாவையொட்டி மகாமகக் குளத்தில் நீராட வந்து செல்லும் பக்தர்கள், பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. மகாமகக் குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், கும்பகோணத்தின் பல்வேறு இடங்கள், அனைத்து கோயில்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சுமார் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 25,000 போலீசார் பாதுகாப்பு பணியில் விரைவில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காவல்துறை கூடுதல் டி ஜி.பி திரிபாதி இங்கு முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை கண்காத்து வருகிறார். மேலும் மகாம கக் குளம் உள்பட கும்பகோணம் முழுவதும் சுமார் 250 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வழிகாட்டுவதற்காக இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள்  அவசரத் தேவைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், மகாமகம் தொடர்பாக பொதுமக்கள் கருத்துகள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும் விரிவான செய்திகளுக்கு  தினமணி, தினமலர்,தினத்தந்தி 15.2.2016 (திருச்சி பதிப்பு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக